Thursday, December 9, 2010

குக்கூ கவிதைகள்

********************************************************
குக்கூ கவிதைகள் - கவிஞர் மீரா
********************************************************
கருப்பண்ணசாமி கோயிலில்
வெட்டப் பட்ட
ஆடுகளைப் பார்த்துக்
கால்கள் சேர்த்துக்
கட்டப்பட்ட கோழிகள்
தொண்டைக் குழிக்குள்
தொடர்கதை எழுதும்...
0
கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற்காலையில்
கண்மூடிக் கிடக்கும்
ஊர்நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில்...
0
இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித் தள்ளும்
எங்கள் ஊருக்கு வந்த
புதிய சிமெண்ட் ஆலை...
0
கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி;
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்...
0
சிறகிருந்தாலும்
செம்மறி முதுகில்
அமர்ந்து செல்லும்
சுகமே சுகமெனச்
சொல்லாமல் சொல்லும்
கரிச்சான் குருவி...
0
குழாயிலிருந்து
விழுந்தது தண்ணீர் கனமாய்
சுற்று முற்றும்
பார்த்து விட்டுத்
தொட்டியில் விழுந்தேன்
அம்மணமாய் ...
*********************************