Saturday, December 3, 2011

சிற்பி மாமா

     கவிஞர் சிற்பி அவர்களின் பாச விரல்களைப் பிடித்து நடந்த எனக்கு அவரைப் பற்றி எழுதுவது என்பது ஒரு கவிஞன் சிறந்த கவிதைகளைப் படிப்பதில் மகிழ்ச்சி கொள்வது போல மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எனவே தான் திரு. சேதுபதி அவர்கள் தொலைபேசியில் கூறியவுடன் என் மகிழ்வின் எல்லைக்கு வரையறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
 என் மூச்சுக் காற்று இப்பூவுலகைத் தொட்ட நாள் முதல் இன்று வரை எனக்கு வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பேறாகக் கருதுவது என் தந்தையாருக்கு அமைந்திட்டதொரு அருமையான நண்பர்கள். என் அப்பாவின் நட்புக்கள் எனும் நெடிய பயணம் என் உயிர் உள்ளவரை தொடர்ந்திடும் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்ததுதான் கவிஞர் சிற்பி அவர்களின் பவள விழாவிற்கான வாழ்த்துகளைப் பதிவு செய்வதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
      கவிஞர் சிற்பி அவர்களை நான் என் இளம்பருவம் முதல் பலமுறை சந்தித்திருக்கிறேன். என் தந்தையார் அவர்கள் ‘சிற்பி மாமா' என்று எனக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்திய அடுத்த விநாடியே கவிஞர் அவர்கள் என்னை அருகில் அழைத்து தட்டிக்கொடுத்த அந்த பாசத்தின் விதை என் நெஞ்சில் பத்திரமாக உறைந்துள்ளது.
      என் தந்தையார் கவிஞர் மீரா அவர்களுக்கும் கவிஞர் சிற்பி அவர்களுக்கும் உள்ள உறவு ஆழமான பாசமும் நேசமும் கலந்திட்டதொரு மென்மையான உணர்வு. நட்பு என்பதன் விளக்கத்திற்கான பாசத் திறவுகோல். என் அப்பாவும் கவிஞர் சிற்பி அவர்களும் பேசிக்கொள்ளும் விநாடிகள் எல்லாம் நகைச்சுவையும் மகிழ்ச்சியும் அங்கே பொங்கி வழியும். வீட்டுப் பாடங்களைப் பாதியில் வைத்து விட்டு, எங்கள் ‘அன்னம்' வீட்டின் நுழைவுவாயிலில் கம்பீரமாய் வீற்றிருக்கும் பாரதியை ரசித்துக்கொண்டே என் அப்பாவின் அறைக்குள் என் விழிகளைப் பதிய வைத்து அங்கே தவழ்ந்தோடுகின்ற பேச்சின் சாராம்சங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அதே சமயத்தில், ஒரு தாயின் மொழிக்கு பதிலுரைக்க ஆசைப்படும் குழந்தையின் தத்தளிப்புக்களோடும் அவர்களின் நட்பின் சுவாரஸ்யம் கலந்த பேச்சுக்கள் எனக்குள் அகப்படாமல் சிரிப்புகளை உதிர்க்கக் கற்றுக் கொடுத்த அந்த ரசனை மிகுந்த நாள்கள் இன்னும் நிறைந்திருக்கின்றன என் கண்களுக்குள்.
      கவிஞர் சிற்பி அவர்களின் மேடைப் பேச்சுக்களில் நான் முதன்முதலாக அந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் அமர்ந்து கேட்டது பாரதி நூற்றாண்டு விழாவில். அதே போன்று குறள் விழா, அப்பாவுடன் நான் உடன் சென்ற விழாக்கள், கவியரங்கங்கள்... என் தந்தையாருக்காக கவிக்கோ நடத்திய ‘கவிக்கோ விருது விழா' போன்ற எனக்குக் காணக்கிடைத்த அரிய வாய்ப்புகள் எல்லாவற்றிலும் கவிஞர் சிற்பி அவர்களின் கம்பீரமான பேச்சு என் செவிப்பறைகளில் இன்பத் தமிழைப் பாய்ச்சியது மட்டுமல்லாமல், தாய்ப் பறவையின் சிறகோசை கேட்டதும் தலைநிமிரும் குஞ்சுப் பறவை போல, கவிஞர் அவர்களது ரசனை மிகுந்த பேச்சைக் கூர்ந்து கேட்ட நிமிடங்கள் எல்லாம் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய பொழுதுகளாகவே மாறிப்போனது.
     என் தந்தையார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவிஞர் சிற்பி அவர்கள் மிகவும் சிறப்பு செய்ததை அடிக்கடி என் தாயார் நினைவுகூறிக் கொண்டே இருப்பார்கள். அந்த நன்றியுணர்வு எப்பொழுதும் எங்கள் அனைவரது நெஞ்சிலும் புதையுண்டிருக்கிறது. படர்ந்து விரிந்த அவர்களது அன்பின் வாசலை எவராலும் தொட முடியாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, என் தந்தையார் அவர்கள், கவிஞர் சிற்பி அவர்களின் ‘மெளன மயக்கங்கள்', ‘பாரதி கைதி எண் 253' போன்ற புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
      சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ‘கவிக்கோ விருது விழா'வில் கவிஞர் இரா. மீனாட்சிக்கும், கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் கவிக்கோ விருதுகள் வழங்கப்பட்டன. அவ்விழாவில் கவிஞர் சிற்பி அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பின்பு சந்தித்தேன். கவிஞர் அவர்களது சிறப்புரையில் மெய்மறந்தேன். கவிஞர் அவர்களை அருகில் சென்று சந்தித்தேன்.
      இதயத்தின் அடியாழம் வரை நிறைந்திருந்த என் இளமையில் பூத்த பாசத்தின் நினைவுகள் எல்லாம் கண்ணீரால் சூழ்ந்தன. என் தந்தையாரை சந்தித்தது போன்ற இன்பம் என் உள்ளத்தைச் சுற்றிலுமாய். கவிஞர் அவர்களும் அதே பழமை கலந்த நினைவுகளுடன் என்னிடம் மிகுந்த பாசத்துடன் அம்மாவின் நலனையும் என் நலனையும் விசாரித்தார். அந்த நெகிழ்வான தருணம் என்றும் எனைவிட்டு நீங்கா இன்பமழைதான்.
      நெய்வேலிக்கு வந்தவுடன் கவிஞர் அவர்களை சந்தித்ததைக் குறித்த நிகழ்வை என் அம்மாவிடன் தெரிவித்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். கவிஞர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். பல அலுவல்களுக்கிடையில் எனக்கு பதில் கடிதம் அனுப்பி எங்கள் குடும்பத்தின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அக்கடிதத்தை நான் பத்திரமாக- “பத்திரம்” ஆக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
      தன்னடக்கமும் சீரிய பண்பும் உயர்ந்தோங்கிய ஒரு மாமனிதரை, ஒரு பெருங்கவிஞரை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு என் தந்தையாரை நினைவு கூர்ந்து நன்றி கூற ஆசைப்படுகிறேன்.
 என் தந்தையார் இன்று இருந்திருந்தால் சிற்பி மாமாவுக்கு வாழ்த்துகளைப் பாமாலைகளால் தொடுத்திருப்பார். நானோ ஒரு இளம்பிறை.
      கவிஞர் சிற்பி அவர்களுக்கு
      பவள விழா போல
     நூற்றாண்டு விழாவும்
இனிதாக, சிறப்பாக நடைபெற எங்கள் குடும்பத்தார் அனைவரின் நல்வாழ்த்துகளையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                 -அன்புடன்,
                                                                                  செல்மா.
( ‘சிற்பி பவள விழா நிகழ்வுகள் - பதிவுகள் ' -  பக்கங்கள்  17,18ல் இடம் பெற்றது)

Saturday, November 19, 2011

மனங்கவர் முன்னுரைகள்...நிலாமகளின் வலைப்பூவில் இருந்து ...

 



            “தமிழ்க் கவிதையின்... தமிழ்க் கவிஞர்களின்... ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளிசூடிய அடையாளம் ‘மீரா'. கவிதைப் பெருக்கில் கடல் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றும் குளமாய் தன்னைக் குறைத்துக் கொண்டவர்; இங்கிதமான காதல் தமிழிலும் அங்கதமான அரசியல் தமிழிலும் முன்னேர் நடத்திய முதல்வர்”- இது அறிவுமதி, ‘மீரா சிறப்பிதழாய்' வெளியிட்ட தன் ‘மண்' மூன்றாமிதழில்.
       
        “சிவகங்கை என்ற சிற்றூரை அவர் இலக்கிய வாதிகள் வந்து செல்லும் புண்ணியதலமாக்கினார். பிறர் படைப்புகளை வெளியிடும் வெறியில் அவருடைய எழுத்துக்கள் தடைபட்டுப் போயின.” என்றவர் மீராவின் கெழுதகை நண்பர் அப்துல்ரஹ்மான்.
       
         பழனிபாரதி சொன்னாற்போல், ‘அன்பின் விதைகளுக்குள்ளே குறுகுறுத்த உற்சாகத்தின் தட்பவெப்பமான மீரா, ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப் பெயர்'.
       
        “எழுதுபவர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கியே சென்றன. இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தும் விதமே அலாதியானது. பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது” இது செழியனின் அஞ்சலிச் சொற்கள்.
        
         “அவர் பரிவு மிக்க ஒரு பதிப்பாளர்; உயர்ந்த கவிஞர்; சிறந்த பண்பாளர் என்கிற தகுதிகளையெல்லாம் விட மேன்மையான இரண்டு உண்டு அவரிடம். ஒன்று... அவருடைய தேர்ந்த இரசனை; இரண்டு... அவரோடு நெருங்கியவர்களிடம் அவருக்கிருந்த பாசம். பலருடைய முகவரியை எழுதித் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தவர் மீரா. அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ... எனக்குப் பொருந்தும்” -கந்தர்வனின் கண்ணியச் சொற்களிவை.
        
       “தன்னை விமர்சனம் செய்பவர்களைக் கூட, மன்னித்து ஏற்கும் மனநிலை மீராவின் தனிச் சொத்து. ‘மரணம் ஒரு கதிர் அரிவாள் அன்று. அதுவொரு புல்வெட்டும் கத்தி' என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் கில்லர்பெல்லாக். பயிர் முற்றிப் பால் பிடிக்கும் வரை கதிர் அரிவாளுக்குக் காத்திருக்கத் தெரியும். புல்வெட்டும் கத்திக்கு பூ எது; புல் எது என பேதம் பார்க்கத் தெரியாது. மரணம் புல்வெட்டும் கத்தி. அது மீராவை நம்மிடமிருந்து பிரித்து விட்டது” இப்படி உருகியவர் இந்திரன்.
       
       “அவரது அன்பையும் அரவணைப்பையும் நட்பையும் உரிச்சொற்களோ உவமைகளோ எடுத்துக் காட்டிவிட முடியாது. மீரா ஓர் அனுபவம். எளிமை நிறைந்த அவரது அன்பில் திளைத்தவர்கள் பாக்கியவான்கள். இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனையற்ற நட்பை இனி யாரிடம் பெறப்போகிறோம்...?!” என நெட்டுயிர்த்தவர் கலாப்ரியா.

         சி. மகேந்திரன் சொன்னது...“சாவு சிலரை மட்டும் சாகடிக்கக் கூடியது. மரணத்தை வெல்லும் வீரியம் கொண்டவர்களுமுண்டு. இவர்கள் நம்பிக்கை மிக்க நெம்பு கோல்கள். மீராவின் மரணம் துயரை வேதனையைத் தந்தாலும், எந்த நம்பிக்கை வறட்சியையும் உருவாக்கவில்லை. அவர் தனது இறுதி நாட்களில், ‘மீரா கவிதைகள்' நூலுக்கு எழுதிய முன்னுரையில்...

‘எனது கனவுகளைப் படித்து என்னைப் போல் எழுதும் புதுக் கவிஞர்களே! இதோ உங்களுக்காக என் ‘மீராவின் கவிதைகள்'. இதிலுள்ள காதல் கவிதைகளோடு நின்றுவிடாதீர்கள். சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை.
எழுந்து நில்லுங்கள்; எழுச்சி கொள்ளுங்கள்; புரட்சி செய்யுங்கள்”
       
        எஸ். விஸ்வநாதன் சொல்வது போல், அவருக்கு கவிக்கோ விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்ட ‘மீரா கவிதைகள்', ‘கோடையும் வசந்தமும்' ‘குக்கூ' என்ற மூன்று நூல்களும் தான் அவரது கடைசி இலக்கியப் படைப்புகள் என அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதை அந்நூல்களுக்கு அவர் எழுதியிருந்த முன்னுரை, என்னுரை, நன்றியுரை போன்றவற்றைப் படிக்கும் போது யூகிக்க முடியும். தன் வாழ்வில் தான் நேசித்த, தன்னை நேசித்த, தான் வளர்த்தெடுத்த குழந்தைகள், தன்னை வளர்த்தெடுத்த உறவினர்கள், நண்பர்கள், சக ஆசிரியர்கள், தனது தமிழ் ஆசான்கள் எல்லோரையும் அநேகமாக ஒருவர் விடாமல் நன்றியுடன் குறிப்பிட்டுப் போற்றியுள்ளதையும், மூன்று நூல்களையும் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த மூன்று ஆசிரியர்களுக்கும், பள்ளித் தோழருக்கும், அன்புச் சகோதரர் மனோகரனுக்கும், காணிக்கையாக்கி இருப்பதையும் அவரது முன்னுரை, நன்றியுரையோடு சேர்த்துப் படித்தால், தனது மரண சாசனத்தைத் தான் இந்நூல்களில் பதிவு செய்திருக்கிறார் என்பது புலனாகும். (மீரா கவிதைகள் நூலில் முன்னுரையே 21 பக்கங்கள்!)

        “அறுபதுகளில் வந்த ஈழத்து மஹாகவியின் ‘குறும்பா'க்களில் மனம் பறிகொடுத்தவன் நான். ஆங்கிலத்திலுள்ள ‘லிமரிக்ஸ்' என்னும் கவிதை வடிவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தி தமிழுக்கு அழகு சேர்த்தவர் மஹாகவி. இது போல அடி, சீர் வரையறையின்றி என் பாணியில் எழுதத் தொடங்கினேன். இதிலுள்ள கவிதைகளை வாசகர்கள் ஓடுகிற ஓட்டத்தில் படித்து தூக்கியெறிந்து விடாமல் கொஞ்சம் நிதானமாகப் படிக்க வேண்டும்.
         சரஸ்வதி பூசைக்குப் போனால் பொரிகடலை கொடுப்பார்கள். அதில் கடலையை விடப் பொரிதான் அதிகமிருக்கும். இருந்தாலும் பொரியை எடுத்தெறியாமல் கடலையுடன் சேர்த்துச் சுவைப்பது போல எல்லாக் கவிதைகளையும் சுவைக்க வேண்டும்.
          ‘குக்கூ'வில் பின்பற்றப்பட்டுள்ள இயைபுத் தொடை பல இடங்களில் செயற்கையாகப் படுகிறது என்கிறார் கவிக்கோ. நியாயமான விமர்சனம்.
கலை(Art), செய்கலை (Craft) இரண்டுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு. சில கவிதைகள் முதல் வகையையும், பல கவிதைகள் இரண்டாம் வகையையும் சேர்ந்தவை. இப்படித்தான் நான் சமாதானம் சொல்ல முடியும். குழந்தைகளோடு குழந்தையாய் சில பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே!”
(குக்கூ முன்னுரையில் மீரா)

        “கழகத்தில் நானெழுதிய கவிதைகளுக்கும்(மீரா கவிதைகள்), இப்போது இதில் (கோடையும் வசந்தமும்) உள்ள கவிதைகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டிலுமே என் முற்போக்கு, அதிமுற்போக்கு அரசியல் முகங்களே தென்படுகின்றன. நடையில் வீரியக் குறைவு. வார்த்தைகளில் கலப்பு மொழி, சில இடங்களில் செயற்கைத் தன்மை இத் தொகுப்பில் காணப்படுகிறது” (கோடையும் வசந்தமும் முன்னுரை-பக்.26)

        1971-ல் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் வசன கவிதைக் காவியம் வெளிவந்தது.(நானெல்லாம் பிறந்த குழந்தை அப்போது!) கவிதை இலக்கியத்தில் மீரா அலை சுழன்று வீசியது. இந்நூலில் முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதியிருப்பார்... படித்தவர்கள் அத்தனை பேருக்கும் மறக்க முடியாத வரிகள் அவை.

“என் வேட்கையே...
நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது.
நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன்; இது ஏழையின் கண்ணீரைப் போல உண்மையானதா என்று பார்.
என் சத்தியமே...
என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் புரிந்து கொள்ளக் கூடும்?
வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?
என் அந்தரங்கமே...
இதோ, என் சொல்லோவியம்... விசுவாமித்திரனைப் போல் வேண்டாமென்று சொல்லிவிடாதே.”
நன்றி: http://www.nilaamagal.blogspot.com/   Thursday, 4 August 2011

Tuesday, April 26, 2011

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...


     தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர்.

     கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன்,
 பி.சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், இக்பால், பஞ்சு, ரவிசுப்ரமணியன், வசந்தகுமார்-இவர்கள் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, நான் நானல்ல; நான் மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஒரு அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்!( மீரா கவிதைகள் நூல் முன்னுரையில் மீரா).

     மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை ‘உரு'வாக்கிக் கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில் கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள்ளன. ஆனால், அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர்.(அறிஞர். தமிழண்ணல்)

     உடல்நலக் குறைவால் தமது 63வது வயதிலேயே மரணம்(01.09.2002) தழுவிய அவருக்குக் கடந்த செப்டம்பரில் (23.09.2010) நெய்வேலியில் ஒரு நினைவுக் கூட்டம் நடந்தது.

     அதில் கலந்து கொண்ட மீராவின் துணைவியார் சுசீலா அம்மையாரிடமும், மகள் கண்மணி பாண்டியனிடமும் அவசரமாய் ஓரிரு வார்த்தைகள் பகிர வாய்ப்புக் கிடைத்தது.

     மறுநாள் மாலை, கண்மணி பாண்டியன் இல்லம் சென்று, ஆற அமர கவிஞர் பற்றிய நினைவுகளை, அவரது துணைவியாரிடம் பேச விழைந்தோம்.

     அம்மையாரின் எளிமையான தோற்றமும், மாறாத புன்னகையும் வசீகரித்தது எங்களை.

     கவிஞர் மீராவின் உன்னதங்களை, அவரது இலக்கிய நண்பர்கள் வாயிலாகவே வெகுவாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அ. நல்லக்கண்ணு போன்ற அரசியலாரின் புகழ் மொழிகளையும் குறிப்பிடலாம்.

      சாகாத வானம் நாம்/ வாழ்வைப் பாடும்/ சங்கீதப் பறவை நாம்/ பெருமை வற்றிப் போகாத/ நெடுங்கடல் நாம்/ நிமிர்ந்து நிற்கும்/ பொதியம் நாம்; இமையம் நாம்/ காலத்தீயில் வேகாத பொசுங்காத/ தத்துவம் நாம்... பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி மேடையில் எடுத்தாண்ட மீராவின் கவிதையொன்றின் சில வரிகள் இவை.

     அவருடனான 38 ஆண்டுகால (10.09.1964)-(01.09.2002) வாழ்தலில் ஒரு துணைவியாக கவிஞரைப் பற்றிய அனுபவங்களை கேட்டறியும் ஆவலை வெளியிட்டோம்.

     தென்றலாக வருடும் மென்குரலில் துவங்குகிறார்...“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.

     ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)

     கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.

     இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.

     தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.

     இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”

     கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.

     இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.

     இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”

     காலமாகிப் போன தன் வசந்தகால நினைவுகளின் அழுத்தம் அவரின் குயில் குரலை இறுகப் பிடித்து கமறச் செய்கிறது.

     “உங்க அண்ணிய ரொம்ப காலமாவே நான் புரிஞ்சுகிடாமயே இருந்துட்டேன் ரவி” எனக் கும்பகோணத்தில் வைத்துக் கடைசியாகப் பார்த்த போது மீரா தன்னிடம் வருந்தியதாக ரவி சுப்ரமணியம் தன் இரங்கல் கட்டுரையில் (மீரா சிறப்பிதழ்-மண்/3, பக்கம் 47) குறிப்பிட்டிருப்பார். மீராவின் நண்பர்கள் அனைவரும் அவரது துணைவியாரை அண்ணி என்று தான் அழைப்பர்.

     அதைப் படித்த போது மீராவின் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘பிரியும் வேளை வரும் வரை தன் அடியாழத்தை அன்பு அறிவதில்லை' என்ற வரிகள் நினைவை நனைத்தன.

     முகில்களிடையே இருக்கும் வானவில்லாய் பிரபல மனிதர்களின் ஜொலிப்பு. அவர்களுக்கு வாழ்க்கைப் பட்ட மகராசிகளோ தத்தம் ஆசைகள், கனவுகள், தேவைகள், ஏக்கங்களைக் கனியறியும் ஆவலில் தம் பூவிதழ்களை உதிர்த்துக் காத்திருக்கும் பழமரங்கள் போலாகின்றனர்.

     கணவர் பாதி குழந்தைகள் பாதி கலந்து செய்யப்பட்ட இவர்களது தினசரிப் பொழுதுகளூடே கொண்டாட யாருமற்றுப் பரண்மேலேற்றிய பழங்குப்பையாய் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளக் குமைச்சல்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

     சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும், அர்ப்பணிப்பு உணர்வும் வெற்றிகரமான இல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது. சாதனை மனிதர்களின் துணையாகிறவர்களுக்கு இவற்றின் சதவீதம் சற்றுத் தூக்கலாகவே இருந்தால்தான் இணைநலம் இனிதாகிறது.

     “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்” என்ற செல்லம்மா பாரதியின் வானொலியுரை (1951, திருச்சி வானொலி நிலையம்) வரும் தலைமுறைகளிலாவது மாறி ஒலிக்கட்டும்... ஒலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெற்றோம்.

நவம்பர் 2010  'கிழக்கு வாசல் உதயம்' இதழில் வெளியானது. 
 
நேர்காணல்: நிலாமகள், http://www.nilaamagal.blogspot.com/

கவிஞர்களின் கவிஞர் ‘மீரா'

     வசனகவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக் கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந. பிச்சமூர்த்திக்குப் பிறகு கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப் பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறு மிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடமைத் தத்துவத்தில் பூத்துக் குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938-ல் தோன்றி 01.09.2002-ல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில்.

     "பிறந்தது தான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா" என்று கவிதை பாடிய கவிஞர் மீ. ராசேந்திரனின் முதல் இரு எழுத்துக்களின் இணைப்பிலிருந்து தான் கவிஞர் மீரா என்னும் பெயர் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்

     "இலக்குமி அம்மாவும், எஸ். மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசனானேன்" என்று குறிப்பிடும் மீரா, எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோர் எழுத்துக்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதியவர்.

     சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
     சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
     போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
     பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
     வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
     வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
     ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
     அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;

என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல் ரகுமான்.

     தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை
     தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்?

என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின் வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை அடுத்து, நீலமணி, கல்யாண்ஜி, இரா. மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங்கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர்,'அன்னம் விடு தூது', ‘கவி' என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா.

     மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் என தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய ‘பாரதி நூற்றாண்டு விழா'.

பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தச் சீர்செய்து மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

     "கல்லூரிப் பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப் பணி, கல்லூரிப் போராட்டப் பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப் பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப் பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சு மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன" என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார்.

     ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப் புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, லட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த ‘மூன்றும் ஆறும்' கவியரங்கக் கவிதைத் தொகுப்பு, ஊழல் அரசியலையும் நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக்கூர் முனைகள் 
‘ஊசிகள்'.
     ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ் மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ.

     அழுக்கைத் தின்னும்
     மீனைத் தின்னும்
     கொக்கைத் தின்னும்
     மனிதனைத் தின்னும்
     பசி!
என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. இராசேந்திரன் கவிதைகள், மீராவின் கவிதைதள், கோடையும் வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள். ‘எதிர்காலத் தமிழ்க்கவிதை' கவிதை விமர்சன நூல். ‘வா இந்தப்பக்கம்' நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு.

     எளிமையும் அன்பும் தோழமையும் நிறைந்த புன்சிரிப்புக் கவிஞர் மீரா, எழுத்திலும் பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவுக் காலத்தில் ‘ஓம்சக்தி' இதழின் ஆசிரியராகவும், சிறிது காலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே. யைப் போல் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார்.

     "பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டது போல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாத நோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான்.(நான் பிழைத்துப் போகிறேன்) ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப் போகும்போதா வரப்போகிறது? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது" என்று அக்காலகட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா.

     அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா.

‘தனியாய்... தன்னந்தனியாய்... தன்னந் தனியனாய்...' இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்க வேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்!

                                                                                       -கிருங்கை சேதுபதி


(24.04.2011 தினமணி செய்தித்தாளின் ‘தமிழ்மணி' பகுதியில் வெளிவந்தது)