Tuesday, April 26, 2011

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...


     தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர்.

     கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன்,
 பி.சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், இக்பால், பஞ்சு, ரவிசுப்ரமணியன், வசந்தகுமார்-இவர்கள் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, நான் நானல்ல; நான் மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஒரு அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்!( மீரா கவிதைகள் நூல் முன்னுரையில் மீரா).

     மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை ‘உரு'வாக்கிக் கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில் கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள்ளன. ஆனால், அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர்.(அறிஞர். தமிழண்ணல்)

     உடல்நலக் குறைவால் தமது 63வது வயதிலேயே மரணம்(01.09.2002) தழுவிய அவருக்குக் கடந்த செப்டம்பரில் (23.09.2010) நெய்வேலியில் ஒரு நினைவுக் கூட்டம் நடந்தது.

     அதில் கலந்து கொண்ட மீராவின் துணைவியார் சுசீலா அம்மையாரிடமும், மகள் கண்மணி பாண்டியனிடமும் அவசரமாய் ஓரிரு வார்த்தைகள் பகிர வாய்ப்புக் கிடைத்தது.

     மறுநாள் மாலை, கண்மணி பாண்டியன் இல்லம் சென்று, ஆற அமர கவிஞர் பற்றிய நினைவுகளை, அவரது துணைவியாரிடம் பேச விழைந்தோம்.

     அம்மையாரின் எளிமையான தோற்றமும், மாறாத புன்னகையும் வசீகரித்தது எங்களை.

     கவிஞர் மீராவின் உன்னதங்களை, அவரது இலக்கிய நண்பர்கள் வாயிலாகவே வெகுவாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அ. நல்லக்கண்ணு போன்ற அரசியலாரின் புகழ் மொழிகளையும் குறிப்பிடலாம்.

      சாகாத வானம் நாம்/ வாழ்வைப் பாடும்/ சங்கீதப் பறவை நாம்/ பெருமை வற்றிப் போகாத/ நெடுங்கடல் நாம்/ நிமிர்ந்து நிற்கும்/ பொதியம் நாம்; இமையம் நாம்/ காலத்தீயில் வேகாத பொசுங்காத/ தத்துவம் நாம்... பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி மேடையில் எடுத்தாண்ட மீராவின் கவிதையொன்றின் சில வரிகள் இவை.

     அவருடனான 38 ஆண்டுகால (10.09.1964)-(01.09.2002) வாழ்தலில் ஒரு துணைவியாக கவிஞரைப் பற்றிய அனுபவங்களை கேட்டறியும் ஆவலை வெளியிட்டோம்.

     தென்றலாக வருடும் மென்குரலில் துவங்குகிறார்...“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.

     ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)

     கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.

     இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.

     தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.

     இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”

     கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.

     இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.

     இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”

     காலமாகிப் போன தன் வசந்தகால நினைவுகளின் அழுத்தம் அவரின் குயில் குரலை இறுகப் பிடித்து கமறச் செய்கிறது.

     “உங்க அண்ணிய ரொம்ப காலமாவே நான் புரிஞ்சுகிடாமயே இருந்துட்டேன் ரவி” எனக் கும்பகோணத்தில் வைத்துக் கடைசியாகப் பார்த்த போது மீரா தன்னிடம் வருந்தியதாக ரவி சுப்ரமணியம் தன் இரங்கல் கட்டுரையில் (மீரா சிறப்பிதழ்-மண்/3, பக்கம் 47) குறிப்பிட்டிருப்பார். மீராவின் நண்பர்கள் அனைவரும் அவரது துணைவியாரை அண்ணி என்று தான் அழைப்பர்.

     அதைப் படித்த போது மீராவின் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘பிரியும் வேளை வரும் வரை தன் அடியாழத்தை அன்பு அறிவதில்லை' என்ற வரிகள் நினைவை நனைத்தன.

     முகில்களிடையே இருக்கும் வானவில்லாய் பிரபல மனிதர்களின் ஜொலிப்பு. அவர்களுக்கு வாழ்க்கைப் பட்ட மகராசிகளோ தத்தம் ஆசைகள், கனவுகள், தேவைகள், ஏக்கங்களைக் கனியறியும் ஆவலில் தம் பூவிதழ்களை உதிர்த்துக் காத்திருக்கும் பழமரங்கள் போலாகின்றனர்.

     கணவர் பாதி குழந்தைகள் பாதி கலந்து செய்யப்பட்ட இவர்களது தினசரிப் பொழுதுகளூடே கொண்டாட யாருமற்றுப் பரண்மேலேற்றிய பழங்குப்பையாய் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளக் குமைச்சல்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

     சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும், அர்ப்பணிப்பு உணர்வும் வெற்றிகரமான இல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது. சாதனை மனிதர்களின் துணையாகிறவர்களுக்கு இவற்றின் சதவீதம் சற்றுத் தூக்கலாகவே இருந்தால்தான் இணைநலம் இனிதாகிறது.

     “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்” என்ற செல்லம்மா பாரதியின் வானொலியுரை (1951, திருச்சி வானொலி நிலையம்) வரும் தலைமுறைகளிலாவது மாறி ஒலிக்கட்டும்... ஒலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெற்றோம்.

நவம்பர் 2010  'கிழக்கு வாசல் உதயம்' இதழில் வெளியானது. 
 
நேர்காணல்: நிலாமகள், http://www.nilaamagal.blogspot.com/

கவிஞர்களின் கவிஞர் ‘மீரா'

     வசனகவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக் கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந. பிச்சமூர்த்திக்குப் பிறகு கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப் பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறு மிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடமைத் தத்துவத்தில் பூத்துக் குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938-ல் தோன்றி 01.09.2002-ல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில்.

     "பிறந்தது தான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா" என்று கவிதை பாடிய கவிஞர் மீ. ராசேந்திரனின் முதல் இரு எழுத்துக்களின் இணைப்பிலிருந்து தான் கவிஞர் மீரா என்னும் பெயர் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்

     "இலக்குமி அம்மாவும், எஸ். மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசனானேன்" என்று குறிப்பிடும் மீரா, எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோர் எழுத்துக்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதியவர்.

     சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
     சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
     போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
     பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
     வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
     வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
     ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
     அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;

என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல் ரகுமான்.

     தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை
     தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்?

என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின் வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை அடுத்து, நீலமணி, கல்யாண்ஜி, இரா. மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங்கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர்,'அன்னம் விடு தூது', ‘கவி' என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா.

     மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் என தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய ‘பாரதி நூற்றாண்டு விழா'.

பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தச் சீர்செய்து மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

     "கல்லூரிப் பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப் பணி, கல்லூரிப் போராட்டப் பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப் பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப் பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சு மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன" என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார்.

     ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப் புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, லட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த ‘மூன்றும் ஆறும்' கவியரங்கக் கவிதைத் தொகுப்பு, ஊழல் அரசியலையும் நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக்கூர் முனைகள் 
‘ஊசிகள்'.
     ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ் மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ.

     அழுக்கைத் தின்னும்
     மீனைத் தின்னும்
     கொக்கைத் தின்னும்
     மனிதனைத் தின்னும்
     பசி!
என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. இராசேந்திரன் கவிதைகள், மீராவின் கவிதைதள், கோடையும் வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள். ‘எதிர்காலத் தமிழ்க்கவிதை' கவிதை விமர்சன நூல். ‘வா இந்தப்பக்கம்' நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு.

     எளிமையும் அன்பும் தோழமையும் நிறைந்த புன்சிரிப்புக் கவிஞர் மீரா, எழுத்திலும் பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவுக் காலத்தில் ‘ஓம்சக்தி' இதழின் ஆசிரியராகவும், சிறிது காலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே. யைப் போல் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார்.

     "பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டது போல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாத நோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான்.(நான் பிழைத்துப் போகிறேன்) ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப் போகும்போதா வரப்போகிறது? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது" என்று அக்காலகட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா.

     அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா.

‘தனியாய்... தன்னந்தனியாய்... தன்னந் தனியனாய்...' இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்க வேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்!

                                                                                       -கிருங்கை சேதுபதி


(24.04.2011 தினமணி செய்தித்தாளின் ‘தமிழ்மணி' பகுதியில் வெளிவந்தது)